அரசியல் அமைப்பைத் திருத்துவதில் மாநிலங்கள் மக்கள் அவையுடன் சம அதிகாரம் கொண்டு உள்ளது. பொதுவாகவே, மக்களவை (Lok Sabha) என்பது இந்திய நாடாளுமன்றத்தின் கீழவை ஆகும். இதன் உறுப்பினர்கள் மக்களால் நேரடித் தேர்தலின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். இந்த அவையின் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 545 ஆகும். இது மாநிலத் தொகுதிகளில் இருந்தும், ஒன்றியப் பிரதேச தொகுதிகளில் இருந்தும் மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் 543 உறுப்பினர்களையும், இந்தியக் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படும் 2 நியமன உறுப்பினர்களையும் உள்ளடக்கிய எண்ணிக்கையாகும். இது இந்திய அரசியல் சட்டத்தில் கூறப்படுள்ளதன்படி வரையறுக்கப்பட்டதாகும். இந்த அவையில் அதிகபட்சமாக இரண்டு ஆங்கிலோ இந்தியர்கள் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகிறார்கள். இருப்பினும் குடியரசுத் தலைவர் இந்த எண்ணிக்கை குறித்து மறுதலிக்கும் பட்சத்தில் இந்த எண்ணிக்கையை கூட்டவோ, குறைக்கவோ அரசியல் சட்டத்தில் வழி வகை செய்யப்பட்டுள்ளது. 2014 ஆம் ஆண்டில் நடைபெற்ற இந்தியப் பொதுத்தேர்தலின் மூலம் நாட்டின் பதினாறாவது மக்களவை துவங்கியுள்ளது. இவர்கள் மக்களின் நேரடியான சார்பாளர்கள் ஆவர். இவர்களின் பதவிக்காலம் ஐந்து ஆண்டுகள். அதன்பிறகு இதன் ஆயுள் மற்றும் பொறுப்புகள் தானாகவே செயலிழந்துவிடும். அவசரநிலைப் பிரகடன காலத்தின் போது இதன் செயல்பாடுகளை குறிப்பிட்ட காலம் வரை முடக்கப்படலாம் அல்லது ஒரு வருடம் காலம் வரை நீட்டித்து முடக்கலாம். மக்களவை உறுப்பினராவதற்கு ஒருவர் (ஆண் அல்லது பெண்) இந்தியக் குடிமகனாக இருத்தல் அவசியம். வயது 25 அல்லது அதற்கு மேற்பட்டவராகவும், நல்ல மனநிலையில் மற்றும் கடனாளியாக இல்லாதிருத்தல், குற்றமுறை வழக்குகள் அவர் மேல் இல்லாதிருத்தல் வேண்டும். தனித்தொகுதிகளில் தாழ்த்தப்பட்டோரும், பழங்குடி வகுப்பினரும் மட்டுமே போட்டியிடமுடியும். பொதுத்தொகுதிகளில் அனைவரும் போட்டியிடலாம். வழக்கமான மக்களவை கூடும் அலுவல் நேரம் காலை 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரையும் மீண்டும் பிறபகல் 2 மணி முதல் 6 மணி வரை நடைபெறுகின்றது. ஒவ்வொரு கூட்ட அமர்வின் பொழுதும் முதல் மணி நேரம் கேள்வி நேரமாக எடுத்துக் கொள்ளப்படுகின்றது. உறுப்பினர்கள் அமைச்சர்களின் துறை சம்பந்தமான கேள்விகள் கேட்க அனுமதிக்கப்படுகின்றது. இதற்கான பதில்கள் தரும் நாட்களும் கேள்வி நேரத்தின் பொழுதே தெரிவிக்கப்படுகின்றன. மாநிலங்களவையைப் போன்றே மக்களவையும் அதற்கு ஈடான அதிகாரங்களை கொண்டுள்ளது. பணவிடை மசோதாக்களை மாநிலங்களைவையில் நிறைவேற்ற முடியாது. மக்களவையில் மட்டுமே நிறைவேற்ற முடியும். இரு அவைகளினாலும் எதிரொலிக்கப்பெறும் சர்ச்சைகள் அல்லது முடிவுக்குவரா சர்ச்சைகள், விவாதங்கள் இரு அவைகளும் சேர்ந்தமர்ந்து நடத்தப்பெறும் கூட்டுக்கூட்டத்தில் முடிவெடுக்கப்படுகின்றது. அச்சமயம் மாநிலங்களவையின் உறுப்பினர்களின் எண்ணிக்கையை விட மக்களவையில் இருமடங்கு உறுப்பினர் இருப்பதால் மக்களவை மேலோங்கிய அவையாக செயல்படும். மக்களவை ஆண்டுக்கு மூன்று முறை கூட்டப்படும். 1. நிதிநிலை அறிக்கை கூட்டத்தொடர் : பிப்ரவரி - மே 2. மழைக்கால கூட்டத்தொடர் : ஜூலை - செப்டம்பர் 3. குளிர்கால கூட்டத்தொடர் : நவம்பர் - டிசம்பர்.